புது தில்லி: கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றும், கரோனாவுக்கு எதிராக வலுவான போரை இந்தியா நடத்துகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, கரோனாவுக்கு எதிரான வலுவான போரை இந்தியா நடத்துகிறது. இயற்கையை இறைவனாக வழிபடுவது தான் இந்தியர்களின் மரபு.
பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்குத் தேவையான சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பு நிதி நேரடியாக சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதார நலனைப் போலவே நாட்டின் பொருளாதார நிலையிலும் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. வேலை வாய்ப்பு திட்டத்தால் நகர்ப்புற பொருளாதாரம் மேம்படும்.
எந்த சோதனையாக இருந்தாலும் அதில் இந்தியா மீண்டு வரும் என்பதே வரலாறு. உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும், இந்திய மருத்துவத் துறை ஒட்டுமொத்த உலகத்துக்கே உதாரணமாக திகழ்கிறது. கரோனாவைத் தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். இந்தியாவில் கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், உடனடியாக அது உலக நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும் மோடி கூறினார்.